Thursday, June 22, 2023

மணிப்பூர் வன்முறை

மணிப்பூரில் மெய்தெய், குகி மற்றும் நாகா இனக்குழுக்கள் அடுத்தடுத்த பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ளன.  மெய்தெய் இன மக்கள் பெரும்பாலும் இந்துக்களாகவும், நாகா மற்றும் குகி மக்கள் பெரும்பாலும் கிறிஸ்துவர்களாகவும் தங்களை அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.



நாகா மற்றும் குகி மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். மெய்தேயில் உள்ளவர்கள் SC, OBC, உயர்சாதியினருக்கான EWS மற்றும் பொதுப்பிரிவை சேர்ந்த சாதி இந்துக்களாக உள்ளனர். மணிப்பூரில் SC-2%, OBC-17%, ST-31%, உயர்சாதியினருக்கான EWS -10% இடஒதுக்கீடு முறை தற்போது அமலில் உள்ளது.

இந்திய ஒன்றியத்துடன் இணைவதற்கு முன் மெய்தெய் மக்கள் தாங்களும் பழங்குடியின வம்சாவழியை சேர்ந்தவர்கள் தான் என்றும், எனவே எங்களையும் பட்டியல் பழங்குடியின பிரிவில் இணைக்க வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் மெய்தெய் மக்களின் சில பிரிவினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைக்க பரிசீலிக்க வேண்டுமென அம்மாநில உயர்நீதிமன்றம் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இதற்கு எதிர் வினையாக நடந்த போராட்டம் தான் வன்முறையாக மாறியது. மெய்தெய் மக்களை பழங்குடியின பட்டியலில் இணைத்தால் தங்களுக்கு உரிய இடஒதுக்கீட்டு உரிமைகளும், நிலஉரிமைகளும் பறிபோகும் என்ற அச்சத்தில் பழங்குடியினர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தை எதிர்த்து மெய்தெயினரும் போராட வன்முறை மூண்டது.
((மெய்தெய் இனக்குழுவை பட்டியல் பழங்குடியில் இணைப்பதற்கும் அவர்களுக்குள்ளேயே இரு வேறுபட்ட கருத்துகள் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.))

மெய்தெய் மக்கள் சமவெளி பகுதிகளில் இருந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாலும், அவர்கள் பழங்குடியினர் கலாச்சாரத்துடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பதாலும் அவர்களை பழங்குடியினர் என வகைப்படுத்த முடியாது. மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் மெய்தெய் இனக்குழுவை சேர்ந்தவர்கள் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். மேலும் பொருளாதாரம், அரசியல் அதிகாரம் என அனைத்திலும் மெய்தெய் மக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்
ஆனால் அவர்களின் நிலப்பகுதி வெறும் 10 சதவீதம் தான் என்பதால் அதனை விரிவுபடுத்த நினைக்கின்றனர்.

மலைப்பகுதிகளில் உள்ள நிலங்களை மெய்தெய் மக்கள் உரிமை கொண்டாட முடியாது. எனவே பழங்குடியின பிரிவில் அவர்களை இணைத்து, குகி மக்களை வெளியேற்றும் படலத்தை தொடங்குவதன் மூலம் முக்கிய பகுதியான இம்பால் உள்ளிட்ட மலைப்பகுதி நிலங்களை தங்கள் வசம் ஆக்கிக்கொள்ளலாம் என்பது அங்குள்ள மதவாத கும்பலின் நோக்கம்.

இதனால் தான் 1950களுக்கு பிறகே குகி இன மக்கள் இந்திய ஒன்றியத்திற்குள் குடியேறினார்கள் என்றும், எனவே தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தி அவர்களை இந்திய ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் மெய்தெய் மக்கள் வழியாக மதவாத கும்பல் பிரச்சாரம் செய்து வருகிறது.

1970களில் அங்கு நடந்த ஆட்சி மாற்றம் இனக்குழுக்களை, மதக்குழுக்களாக மாற்றத் தொடங்கியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது மணிப்பூரில் அரங்கேறுவதும் இன வன்முறை இல்லை. அது இன போர்வைக்குள் நடந்தேறும் மத வன்முறை. இந்திய ஒன்றியத்தில் இணைந்த போது மெய்தெய் இனக்குழுவில் 100க்கும் மேற்பட்ட உட்குழுக்கள் இருந்துள்ளன. எல்லை பிரச்னை, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்கள் தங்களை அரசிடம் இருந்தும், ராணுவத்திடம் இருந்தும் தற்காத்து கொள்ள தங்களுக்கு மத அடையாளமிட்டு கொண்டனர். மதவாத சக்திகளும் தங்கள் சித்தாந்த பரப்புக்காக, அரசிடமும், அரசு இயந்திரத்திலும் உள்ள தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி தந்திர வலையிட்டனர்.

இனக்குழுக்கள், மத அடையாளங்களை தங்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்த நினைத்தன. ஆனால் மதங்கள் இனக்குழுக்களை பாரபட்சமின்றி முதலில் மறைத்தும், பின் அழித்தும் தங்கள் பசிக்கு இறையாக்கி கொள்வன என்பதை அவர்களால் உணர முடியவில்லை. இனக்குழு என்ற சொல்லாடலை மதங்கள் இன்றும் உடன் வைத்துக்கொள்வதற்கான காரணம், அது மத துவேசங்களுக்கு தேவையான மற்றுமொரு கருவி. அவ்வளவே.

மெய்தெய் இனக்குழுவை பட்டியல் பழங்குடியில் சேர்க்காமல், இடஒதுக்கீட்டில் மறுவரையறையை மேற்கொள்வதற்கான குழு அமைக்கவும், இரு பிரிவினைரையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதின் மூலமாகவும் பிரச்னையையும், வன்முறையையும் தற்காலிக முடிவுக்காவது கொண்டு வரலாம், ஆனால்
அரசு அடுத்த வருடம் மே மாதம் வரை இது தொடர்பாக வாய் திறக்கப்போவதுமில்லை,  பிரச்னையை தீர்க்கப்போவதுமில்லை.

தற்போது வரை, வன்முறையால் நூற்றுக்கணக்கான உயிர்களும், வன்முறையை கலைக்க நடந்த துப்பாக்கி சூடு உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு 11க்கு மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர்.


வன்முறைகள் எதையும் தீர்க்காது என்பதையும், அரசு அதன் மக்களான தங்களை காக்க தவறியதற்கான நுண் அரசியலையும் உணர்ந்து மக்களே தங்களை அமைதிப்படுத்தி கொள்ள பிரார்த்திப்பதை வேறு வழியில்லை

Wednesday, June 21, 2023

அவரு கலைஞர். அவ்ளோதான்.

கலைஞர் கோட்டம் வள்ளுவர் கோட்டம் போல் தான் உள்ளது !

ஆனால் வள்ளுவர் கோட்டத்தையே ஆழித்தேர் வடிவில் தான் அமைத்திருந்தார் கலைஞர்.

கன்னியாக்குமரில விவேகானந்தர் பாறை திறக்கப்பட்ட அடுத்த 7 மாசத்துல வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் கலைஞர்.

கன்னியாக்குமரியில விவேகானந்தர் பாறை உருவாக தொடங்கியது 1963 காங்கிரஸ் அரசு ஆட்சியில. விவேகானந்தரோட நூற்றாண்டை சிறப்பிக்க ஒன்றிய அரசு எடுத்த இந்த முடிவுக்கும், அதையும் தென்கோடியான குமரியில அமைக்குறதுக்கும் காங்கிரஸ்ல இருந்த சர்தார் படேலின் வழிதோன்றிய ஆர்எஸ்எஸ் அபிமானிகளும் ஒரு காரணம். அதுக்கு 1008 லாஜிக் காரணங்களும் சொல்லப்பட்டது.


1962ல தொடங்கி 1972 செப்டம்பர்ல "காங்கிரஸ்" ஆட்சியில ஆர்எஸ்எஸ்ஸோட ஏக்நாத் ரானடே மூலமா விவேகானந்தர் மண்டபம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுச்சு. 1973 ஏப்ரல்ல சென்னைக் கோடம்பாக்கத்துல கலைஞர் தலைமையில வள்ளுவர் கோட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 1976ல கட்டிமுடிக்கப்பட்டது. வள்ளுவர் கோட்டம் திறப்பு விழாவுக்கு 7 நாள் முன்னாடி திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால அதை அப்போதைய குடியரசுத்தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது திறந்து வச்சாரு.

1973ல ஆரம்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்ட கட்டமைப்பை ஆழித்தேர் வடிவத்துல உருவாக்குறதுக்கு 3 வருசத்துக்கு முன்ன அதாவது 1970ல தான் இரண்டு தசாப்தமா ஓடாம கிடந்த ஆழித்தேரை ஓடவிட்டு சமத்துவ வடம் பிடிக்க வச்சாரு கலைஞர். இதே காலக்கட்டத்துல தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், அறநிலையத்துறைக்கு தனி அமைச்சகம்லாம் அமைச்சாரு.

வள்ளுவர் கோட்டத்தை கட்டி அவரோடைய சிறப்புகளையும், புகழையும் எப்படி உலகறிய எடுத்து சொல்ல முடிஞ்சுதோ, அதேபோல இந்த பக்கத்துக்கு தேவையான ஆன்மீக வழி ஆயுதத்தையும் உருவாக்கி வச்சிருந்தாரு கலைஞர். ஆன்மிகத்தை கொண்டே அதன் மத துவேச அரசியலை வீழ்த்துறது தான் அதோட வேலை.


விவேகானந்தர் மண்டபத்துக்கு பக்கத்துலயே வள்ளுவர் சிலையை இந்திய ஒன்றியத்தோட தென்கோடி முனையில நிற்க வைக்க நினைச்சாரு கலைஞர். அதுக்காக தேசிய கட்சிகள் ஆண்டாண்டு காலமா ஆடிட்டு இருந்த ஆட்டத்தை அசால்ட்டா பீச்சாங்கையிலயே ஆடி ஜெயிச்சாரு கலைஞர். விவேகானந்தர் மண்டபத்தை கட்டுறதுக்கு  காரணமா இருந்த அதே ஆர்எஸ்எஸ் ரானடே மூலமாவே சிலை வைக்குற திட்டத்தை 1975ல அறிவிச்சாரு. இந்த திட்டத்துக்கு 1979ல "ஜனதா தள" ஆட்சியில மொரார்ஜி தேசாய் தலைமையில அடிக்கல் நாட்டப்பட்டுச்சு. ஆனா அதுக்கப்பறம் அது பல சிக்கல்களை சந்திச்சு 1990ல தொடங்கி 2000 ஜனவரி 1ல கட்டி முடிக்கப்பட்டு திறக்கவும்பட்டுச்சு.

வள்ளுவர் கோட்டம் - ஆழித்தேர் வடிவம் - வள்ளுவர் சிலை எல்லாமே ஆன்மீக வழி மத துவேச அரசியலுக்கு எதிரான கலைஞரோட ஆயுதங்கள் தான்.  அவரோட ஆயுதங்கள் எல்லாத்தையும் அவருடைய எதிரிகள் தான் தேர்ந்தெடுத்தாங்க.

The Real "அவன் பொருளை எடுத்து அவனையே போடுறது".

கலைஞரோட மக்கள் நலத்திட்டங்கள் மட்டும் இல்ல, அவர் எடுத்து வைக்குற ஒத்த செங்கல்லும் கூட வரலாற்றை எழுதுறதுக்கும், திருத்துறதுக்குமானதா தான் இருந்திருக்கு. அவரோட மிக எளிதான அத்தனை நகர்வுலையும் நாம நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய அரசியல் நிலைப்பாடு இருந்திருக்கு. மூளை முழுக்க ஒருத்தரால எப்படி மக்கள், அவர்களோட அரசியல், பொருளாதாரம், உரிமைகள், நலன் பற்றியே சிந்திக்க முடிஞ்சுது ?  அவரை alpha maleனு தனியாலாம் அடையாளப்படுத்த வேணாம். alphaக்குலாம் alpha அவரு. So simply said அவரு கலைஞர். அவ்ளோதான்.

The only one super one raaaa அந்தாளு🖤.

Monday, June 5, 2023

NIRF ParameterSஐ விரிவுபடுத்த வேண்டும் !

கல்வி நிலையங்களை தரவரிசைப்படுத்துவதிலும் கூட Literacy rateக்கான வரையறையில் கையெழுத்து போடுவது என்ற காரணியை தொன்று தொட்டு வைத்திருப்பது போல NIRFம் அதே மாதிரியான பெட்ரோமேக்ஸ் லைட்களையே கணக்கில் கொண்டு செயல்படுகிறது.

இந்த பட்டியலை உதாசீனப்படுத்துவது நோக்கமல்ல. அதில் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய வரையறைகள் நிறைய இருக்கின்றன. NIRF வைத்துள்ள Parametersஐ சற்று விரிவுபடுத்த வேண்டியதும், உளவியல் காரணங்களையும் அதில் உட்புகுத்த வேண்டுமென்பதிலும் கவனமும், கராரும் காட்ட வேண்டும். 

* ESCS(Economically and socially challenged students)ன் படி மாணவர்களை கணக்கிடுவதின் படியே ஆசிரியர்களின் அளவையும் அது உறுதிபடுத்த வேண்டும். (Economically என்பதில் சிக்கல் இருக்காது, Socially என்பதில் தீர்க்கம் வேண்டும்)

*பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்வது போல, இடைநிற்றல் மற்றும் கல்வியை முழுமையாக தொடர முடியாத மாணவர்களின் எண்ணிக்கையை வைத்தும் பட்டியல் உறுதி செய்யப்பட வேண்டும்.

*மாணவர்களின் கல்வி தரத்தை மட்டுமல்ல, கல்லூரியில் அடுத்த 3,4 அல்லது 5 வருடங்கள் அவர்கள் கல்வி பயில்வதற்கான உடல் மற்றும் உள ரீதியான சூழலையும் அது உருவாக்கி தந்திருக்கிறதா என்பதையும் உறுதி செய்தே பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.

* கல்வி கற்கும் பெண்களின் அளவை parameterல் தனி அளவுருவாக வைத்திருப்பது போலவே திருநங்கை/திருநம்பிகளையும் parameter கொண்டிருக்க வேண்டும்.

இடைநிற்றலை காரணமாக முன் வைத்து இந்த பட்டியல் உறுதி செய்யப்பட்டால் பெரும்பாலான ஐஐடிகள் இந்த பட்டியலுக்குள் வர வாய்ப்பில்லை. கடந்த 2019ல் ThePrint ஒரு கட்டுரை வெளியிட்டது. அதில் இந்தியா முழுவதும் இருக்கும் ஐஐடிகளில் 2018&19ம் ஆண்டுகளில் 2400 மாணவர்கள் இடைநின்றுள்ளனர். அதிலும் அவர்கள் SC,ST,OBC மாணவர்கள் என கூறியிருந்தது. அதன் பிறகு இது போன்ற SURVEY வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(கட்டுரை - முதல் COMMENTல்)

Financial resources and their utilisationல் தன்னிரைவு அடைவதும் இந்த
NIRF பட்டியலில் இடம் பிடிப்பதற்கு முக்கியதொரு காரணியாக உள்ளது. என்றாலும் தமிழ்நாடு அரசின் ஒரு சில பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள் தக்க வைத்துள்ள இடங்களை விட அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த நிதி தன்னிகர்வை அடைந்த தஞ்சாவூர் சாஸ்த்ரா சற்று கூடுதலாக தக்க வைத்துள்ளது கவனிக்க வேண்டியது. 

Parameterன் முக்கியமான காரணிகளையே புறங்கையால் handle செய்த பல்கலைக்கழங்கள்/ கல்லூரிகளை பட்டியலுக்குள் கொண்டு வந்ததே கவலை தரக்கூடிய ஒன்றாகவுள்ளது. மற்ற காரணிகளில் அவை தன்னிறைவை அடைந்திருக்கலாம். ஆனால் இரண்டு கையையும் சேர்த்து தட்டினால் தானே சத்தம் வரும்.

இதுபோன்ற பட்டியல்கள் யாருடைய வளர்ச்சியையும் ஒருபோதும் தடுத்து விடப்போவதில்லை என்றாலும், எங்களின் கையே எங்கள் கண்களின் பார்வையை பறிப்பதில் அத்துனை நியாயமில்லை.