Monday, December 12, 2022

விவசாயம் மட்டும் வளர்ச்சியை கொடுத்திடாது

தமிழ்நாட்ல விவசாயத்தோட வளர்ச்சி டெல்டாவை வச்சு தான் இருக்கு, ஆனா டெல்டாவோட வளர்ச்சி விவசாயத்துல போதிய அளவா இல்ல.

விவசாயத்தை மட்டும் வாழ்வாதாரமாக வச்சிருக்குற மாவட்டங்கள்ல தனிநபர் வருவாய் குறைவா இருக்கு. விவசாயத்தை மட்டும் நம்பி இல்லாம Secondary and Tertiary Sectorsகளை(STS) நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுருக்கு. 


95 சதவீதத்துக்கு மேல் விவசாயத்தை மட்டும் செய்யும் டெல்டா பகுதிகள்ல உள்ள தனிநபர் வருவாய், STSல அதிகம் ஈடுபட்டிருக்க மாவட்டங்களோட வருவாயை விட குறைவா இருக்கு. டெல்டாவுக்குள்ள வந்தாலும் சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களோட வருவாய் அதிகமாக இருக்க காரணம் STSவோட வளர்ச்சி தான். இந்த வளர்ச்சி கடந்த 2-3 தசாப்தங்கள்ல ஏற்பட்ட ஒண்ணு தான்.

பெரம்பலூர் மாவட்டம் டெல்டாவுக்குள்ள வந்தாலும், STSயோட வளர்ச்சியை சமீப காலமா தான் சந்திச்சு வருது. ஆரம்பகாலங்கள்ல ஏற்படுற இதுபோன்ற தொய்வை சரிசெய்ய அரசு தீவிர முயற்சி எடுத்தா இதை தவிர்க்குறதுக்கான வாய்ப்பு இருக்கு.

பெரம்பலூரோட வருவாய் மிகச்சொற்பமாய் இருக்குறதுக்கு, அங்க விவசாயமா ? STS தொழில்களா ? அப்படிங்குற குழப்பம் இன்னும் மக்கள்ட்ட இருக்குறது தான் காரணம். இந்த பகுதியில வேலைவாய்ப்பை உறுதி செய்றதை ஒரு பக்கம் வச்சுட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொழில் முனைவை மேலும் எளிமையாக்குனா இதை ரொம்ப சுலபமா கடந்து வந்துரலாம்.

நெய்வேலியோட நிலைமையும் ஆரம்ப காலத்துல இப்படி தான் இருந்தது. அதுக்கப்பறம் ஒரு சேர நடந்த கல்வி வளர்ச்சியும், STSன் வளர்ச்சியும் இப்போ ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தோட தனிநபர் வருமானத்தை டெல்டா பகுதிகளை விட அதிகமாக்கி இருக்கு.

தனிநபர் வருவாயில பின்தங்கிய நிலையில இருக்குற டெல்டா பகுதிகள்ல STSஐ அதி தீவிரமாக வளர்க்க வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுருக்கு. வளர்ச்சிக்காக அரசு எடுக்குற தொழில்துறை சார்ந்த முடிவுகளை, டெல்டா மக்கள் ஆதரிக்குற பட்சத்துல அவங்களோட தனிப்பட்ட வளர்ச்சிக்கும் இது நல்லதா அமையும். 

வளர்ச்சிக்காக மாற்றுப்பயிர், பணப்பயிர் விளைவிக்குறதலாம் ஓரமா வச்சிட்டு, உற்பத்தி செய்யுற பொருட்கள்ல இருந்து Value added productsஐ தயாரிக்க தொடங்கலாம். விவசாய தொழிலை வாழ்வாதாரமா கொண்டு இருக்குற மக்களை அது சார்ந்தே இருக்குற STS தொழில்களை நோக்கி இழுத்து வந்துட்டா ! அடுத்த கட்டத்தை நோக்கி அவங்களே ரொம்ப சீக்கிரமா நகர்ந்துடுவாங்க.

விவசாயத்தையே முழுசா நம்பி பெரிய அளவுல வளர்ச்சியே இல்லாம இருக்குற டெல்டா பகுதி மக்களோட வளர்ச்சி, STSவோட தொடக்கத்தால எட்டி பிடிக்குற தூரத்துக்கு வந்துரும்.

Thursday, September 29, 2022

பேசுப்பொருளாகி இருக்க வேண்டியது காண்டமா ? பாகிஸ்தானுக்கு போங்குறதா ?

பீகாரின் குழுந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனரான ஹர்ஜோத் கவுர் பம்ரா IAS, பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்களிடம் கலந்துரையாடுகிறார். அதில் மாணவி ஒருவர் " பள்ளியில் மோசமாக உள்ள கழிப்பறை குறித்தும், அரசு பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்குவது ?" குறித்தும் கேள்வி எழுப்புகிறார். 

அதற்கு பதிலளித்த அந்த பெண் அதிகாரி இப்போ நாப்கின் கேட்குறீங்க, அப்பறம் ஜீன்ஸ் கேட்பீங்க , அப்பறம் ஷீ கேட்பீங்க , அடுத்து காண்டம் , குடும்ப கட்டுப்பாடுனு அரசுட்டயே எல்லாத்தையும் கேட்பீங்களானு சொன்னவுடனே,

அங்க இருந்த மாணவிகள்லாம் அதுக்கு தான ஓட்டு போடுறோம்னு கத்திருக்காங்க.

உடனே அந்த அதிகாரி , இதுக்காகலாம் நீங்க ஓட்டு போட வேணாம், பாகிஸ்தானுக்கு கிளம்புங்கனு சொல்லிருக்காங்க.

இதுக்கு எதிர்ப்பு , விளக்க கடிதம்னு பிரச்னை தொடர்ந்து போயிட்டுயிருக்கு.

இங்க நாம கவனிக்க வேண்டியதும் பேச வேண்டியதும் அந்த பொண்ணோட குரலை தான். ஆனா அந்த அதிகாரி சொன்ன பாகிஸ்தானுக்கு போங்குறத தான் நாம பிரதானமா எடுத்துக்கிறோம். இங்க ஒரு கூட்டம் எதுக்கெடுத்தாலும் பாகிஸ்தானுக்கு போ, அர்பன் நக்சல், தேஷ்விரோதிஸ்னு தொடர்ந்து சொல்லிட்டே இருக்கும். ஆனா நாம அதை எதிர்க்குறதா நினைச்சிட்டு , இந்தப்பக்க உரிமையையும், தேவையையும் கேட்டுட்டு இருக்கவங்களோட குரலை இரண்டாம் பட்சமா பாக்குறோம். அது தான் பிரச்னை. அதுவும் தான் பிரச்னை. ஆனா, அதை தான் நாம உற்று  நோக்கவும், தீீீர்க்கவும் வேண்டிய பிரதான பிரச்னையா இருக்கனும்னு நான் நினைக்கிறேன். 

பாகிஸ்தானுக்கு நான் ஏன்டா போகனும் வெண்ணை மவனேனு கேட்குறதுலாம் முக்கியமானது தான். ஆனா அதைவிட முக்கியமானது, இப்போ நான் என்ன சொல்லிட்டனு நீ என்னைய பாகிஸ்தானுக்கு போக சொல்டறங்குறது. ? கேள்வி கேட்க கூடாது, தேவையை சொல்லக்கூடாது, உரிமையை வேணுங்க கூடாது. இதலாம் சொல்லிட்டா நாம நாடு கடத்தப்படனும். 

ஒண்ணு புரிஞ்சுக்கனும், அவனால நம்ம இங்கயிருந்து எங்கயும் கிளப்ப முடியாதுங்குறது நமக்கு நல்லாவே தெரியும், அப்பறம் ஏன் அதுக்கு போய் முண்டிட்டு கிடக்கனும். அவனுக்கு மக்களோட உரிமையை , தேவையை நிறைவேத்த முடியலனா அவன் வேணா இங்கிருந்து கிளம்பிக்கட்டும். நாம அந்த பொண்ணு பக்கம் நின்னு இன்னும் சத்தமா அதை கேட்போம், சொல்லுவோம். அவ்ளோதான்.. 

திரும்பி போகவும் கணவாய் இருக்கு தானே. அப்பறம் என்ன ?   

மேல அந்த அதிகாரி சொன்ன எல்லாமே அரசு கவனத்துல எடுத்து நிறைவேத்த வேண்டிய ஒண்ணுதான். அதை தமிழ்நாடு அரசு முழுசாவும், ஒரு சில மாநிலங்கள் அதில் சிலதையும் மக்களுக்கான திட்டமா செயல்படுத்திட்டு தான் இருக்கு. 

மக்களோட அடிப்படை தேவையையும், உரிமையையும் கவனிக்காத அரசும், அதோட அதிகாரிகளும் அப்படி என்னத்தை கிழிச்சு ஆற வைக்க போறாய்ங்க !?

Friday, September 23, 2022

துறைமுகங்கள் வரைவு மசோதா திருத்தம் - 2022

இந்த மசோதாவை தமிழ்நாடு உள்ளிட்ட கடலோர மாநிலங்கள் அனைத்தும் எதிர்க்கின்றன. காரணம், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு, இடைநிலை துறைமுகங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் என்பதால். மாநில அதிகாரங்கள் என்பதை தாண்டி குஜராத் , கோவா , மகாராஷ்டிரா போன்ற ஆளும் ஒன்றிய அரசின் கட்சிகளின் மாநில அரசே எதிர்ப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு.


 அது பொருளாதார வருவாய். இந்தியாவில் 212 சிறு மற்றும் 12 பெரும் துறைமுகங்கள் உள்ளன.(According to ministry of ports,shipping and waterways) இவற்றில் உள்ள பெரும் துறைமுகங்கள் ஒன்றிய பட்டியலில் உள்ளன. மீதமுள்ளவை மாநில பட்டியலில் உள்ளன. 12 பெரும் துறைமுகங்களில் 3 தமிழ்நாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிறு துறைமுகங்களில் குஜராத்தும், மகாராஷ்டிராவும் தலா 48 துறைமுகங்களை கொண்டுள்ளன. இவை தான் ஆளும் கட்சியாக இருந்தாலும் அவை எதிர்ப்பதற்கு மிக முக்கிய காரணம். குஜராத் அரசால் மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் போக காரணம், நாட்டின் சிறு துறைமுகங்களில் வரும் மொத்த வருவாயில் 70% குஜராத் மட்டுமே ஈட்டுவது தான். பெரும் துறைமுகங்களில் வரும் வருவாயை விட சிறு துறைமுகங்கள் மூலமாக வரும் வருவாய் அந்தந்த மாநிலங்களின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பை தருகின்றன. பத்து, பத்து ரூபாயா பத்து பேர்ட்ட வாங்குறதுக்கும் நூறு ரூபாயா ஒருத்தர்ட்ட வாங்குறதுக்கும் உள்ள வேறுபாடு தான் சிறு,பெரும் துறைமுகங்களோட வேறுபாடு. பெரும் துறைமுகங்கள் 2020-2021ல் 672.68 மில்லியன் டன் அளவுக்கு சரக்கு பரிமாற்றங்கள் செய்துள்ளது. சிறு,இடைநிலை துறைமுகங்கள் 577.30 மில்லியன் டன் அளவுக்கு சரக்கு பரிமாற்றம் செய்திருக்கின்றன. இரண்டுத்துக்கும் 95 மில்லியன் டன் தான் வேறுபாடு. இதுல Passenger,Containers வேற தனியா இருக்கு. 


2020-21ல மொத்த சிறு,இடைநிலை துறைமுக அளவான 577.30ல, குஜராத் மட்டும் 387.57 மில்லியன் டன் பரிமாற்றம் பண்ணிருக்கு. தமிழ்நாடு வெறும் 7.41 மில்லியன் டன் மட்டும் தான். அதுல காட்டுப்பள்ளி துறைமுகம் மட்டும் 7.05 மில்லியன் டன், மீதமுள்ள 14 துறைமுகங்களோட கூடுதல் தான் 0.36 மில்லியன் டன். குஜராத்தையோ , மற்ற மாநிலங்களையோ ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் துறைமுகங்கள் மூலமாக வரும் வருவாய் என்பது மிகச்சொற்பம் தான். எனினும் தமிழ்நாடு அரசு மிகத்தீவிரமாக இந்த மசோதாவை எதிர்ப்பதற்கும் சில காரணங்கள் உண்டு. Maritime State Development Council(MSDC) எனும் கவுன்சில் 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது மாநில அரசுகளின் கைகளில் இருந்த துறைமுக நடவடிக்கைகளில் மேற்பார்வையிடவும், ஆலோசனைகள் வழங்கவும் உருவாக்கப்பட்டது. ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் இதில் இருப்பார்கள். ஆனால் அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசின் கைகளிலேயே இருந்தது. தற்போது வரவிருக்கும் திருத்த மசோதா இந்த கவுன்சிலை , ஆணையமாக மாற்ற வித்திடுகிறது. மேலும் ஆணையத்தின் நிர்வாகிகள் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவர்கள். இதனால் Msdc தற்போதிருக்கும் நிலையை இம்மசோதா தலைகீழாக மாற்றும். மாநில அரசு உறுப்பினராகவும், ஆலோசனையிலும் பங்கு பெறலாம் ஆனால் அதிகாரங்கள் முழுவதும் ஒன்றிய அரசின் கைக்கு சென்றுவிடும். மாநில பட்டியலில் உள்ள ஒரு துறையில் மாநிலங்களின் அதிகாரங்களை செயலிழக்க செய்து அதனை இம்மசோதா மூலம் முழுவதுமாக பெற எத்தனிக்கும் இந்த மசோதாவை தமிழ்நாடு அரசு ஏற்காததும், எதிர்ப்பதும் போல மற்ற மாநிலங்களும் இந்த மசோதா அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்பதையும், மாநில அதிகாரங்களை பறிக்கும் செயல் என்பதையும், தனியார்மயமாக்கலின் விபரீதங்களையும் உணர்ந்து எப்போது செயல்பட போகின்றன என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Saturday, September 10, 2022

மின்கட்டண உயர்வில் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு

தமிழ்நாட்டில் 1989ல் இருந்து விவசாயத்துக்கு முழுமையாகவும், 2016ல் இருந்து அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரமும் வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மிக குறைந்த விலையிலேயே மக்களுக்கு மின்சாரத்தை வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. சமீபத்தில் கொண்டு வரப்பட்ட மின்சார மசோதாவில் கூட அதிக சுமையை மக்கள் மீது சுமத்துவதற்கான ஏகபோக நடைமுறைகளும் , சிக்கல்களும் இருந்ததால் தான் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அந்த மசோதாவிற்கு முழுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதும் கூட பங்கீட்டில் வரும் மின்சாரத்திற்கும் , உற்பத்தி காரணிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கான சூழல் அமைந்ததால் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுயிருக்கிறார் .

மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு தமிழ்நாட்டின் மின் கட்டண உயர்வு குறித்து பேச கடைசியாக கிடைத்தது டெல்லியாக தான் இருக்கும். ஆனால் 
டெல்லியுடன் ஒப்பிடும் அவசியம் தமிழ்நாட்டிற்கு நிச்சயமாக இல்லை. காரணம் டெல்லியில் மின்சார வாரியம் தனியார் வசம் சென்று இரண்டு தசாப்தங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தர்க்கத்திற்காக பார்த்தோமேயானால்,டெல்லியில் 7 தனியார் நிறுவனங்கள் மின் விநியோகம் செய்து வருகின்றன. இவை அனைத்தின் சராசரி குறைந்தபட்ச மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ஏறத்தாள 6 ரூபாய். மீண்டும் நினைவில் கொள்ளுங்கள் குறைந்தபட்ச சராசரி. ஆனால் தமிழ்நாட்டின் நிலை அப்படியில்லை. இங்கு குறைந்தபட்ச மின் கட்டணம் 1.75 ரூபாய் மட்டுமே. இது வேறெந்த மாநிலத்தையும் விட குறைந்த விலையாகும். தற்போது விலையுயர்த்தப்பட்டதன் குறைந்தபட்ச கட்டணம் கூட 2.25 ரூபாய் தான். இதுவும் கூட எந்தவொரு மாநிலமும் நிர்ணயிக்காத குறைந்த கட்டண விலை தான். இருந்தும் ஊடகங்களில் வருவது போன்றும், வாட்ஸ் அப் வரலாற்று ஆய்வுகள் கண்ணை மூடிக்கொண்டு Forward செய்வது போலவும் பெரும் மலையாக மின் கட்டண உயர்வை பார்க்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது ??. 

மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. உண்மைதான். மொத்தமாக உயர்த்தப்பட்ட கட்டண விவரத்தை யூனிட்டுக்கான விலையாக மக்களிடம் முன்னெடுத்து வைக்காதது மட்டுமே இதற்கு காரணம். 100 யூனிட் வரை தமிழ்நாடு அரசு மின்சார மானியம் வழங்கி வருகிறது. இதேபோல் 101-200 வரையுள்ள 100 யூனிட் மின்சாரத்திற்கும் அரசு மானியம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது..

தமிழ்நாட்டை பொறுத்தவரை நேற்று வரை 4 நடைமுறைகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இன்று முதல் அவை 2 வகைகளாக மாற்றப்பட்டுள்ளது.
முந்தையதின் முதல் நடைமுறையில் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம். 
இரண்டாவது நடைமுறையில் 101-200 வரை யூனிட் ஒன்றுக்கு 2.50 ரூபாயும், சேவை கட்டணமாக 30 ரூபாயுமாகும். இதில் மானியமாக யூனிட்டுக்கு 1 ரூபாயும் , சேவை கட்டணத்தில் 10 ரூபாயும் வழங்கப்பட்டது. எனில் யூனிட் ஒன்று 1.50 ரூபாய் மட்டுமே.
மூன்றாவது நடைமுறையில் 201- 500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 3 ரூபாயும், சேவை கட்டணமாக 40 ரூபாயாகவும் இருந்தது. மானியமாக சேவை கட்டணத்தில் 10 ரூபாய் வழங்கப்பட்டது.
நான்காவது நடைமுறையில் 501- aboveல் மூன்று பிரிவுகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன் சராசரி 4.9 ரூபாய். சேவை கட்டணம் 50 ரூபாய். இதில் மானியம் ஏதுமில்லை. 

தற்போதைய மாற்ற நடைமுறைப்படி 2 பிரிவே, அவை 101- 500 , 501- above. சேவை கட்டணம் குறித்த தகவல் ஏதுமில்லை. 

இதில் முதல் நடைமுறையான 101-500ல் , முதல் 100 யூனிட்டுக்கு கட்டணமில்லை. 101- 200 வரை யூனிட்டுக்கு 4.50 ரூபாய், அரசு மானியமாக 2.25 ரூபாய் வழங்குகிறது. 
201- 400 வரை 4.50 ரூபாய்.
401- 500 வரை 6 ரூபாய்.
501- aboveல் 6 பிரிவுகளில் உள்ள கட்டண சராசரியாக 8 ரூபாய் உள்ளது.

கட்டண உயர்வு எவ்வளவென்று பார்த்தோமானால்,

101- 200 வரை - 75 பைசா
201- 400 வரை - 1.50 ரூபாய்
401- 500 வரை - 3 ரூபாய்
501 - aboveல் - 3.10 ரூபாய்
[குறிப்பிட்டவை அனைத்தும் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணம் மட்டுமே]

தற்போதைய சூழல் மற்றும் காரணங்களால் மின்கட்டண உயர்வு தவிர்க்கப்பட முடியாதது தான். வேறெந்த மாநிலமும் மக்களுக்கு வழங்காத/வழங்கமுடியாத குறைந்த விலையில் தான் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. எனினும் அதனை சுமப்பது சாமானிய மக்களுக்கு சிரமமானது தான்.  அதற்காக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் இடத்தில் தமிழ்நாடு இல்லை. தமிழ்நாட்டுடன் ஒப்பிட வேண்டுமெனில் கட்டணத்தை அரசு சில மடங்குகள் உயர்த்தினால் மட்டுமே முடியும். சமூக ஊடகங்களிலும்/ஊடகங்களிலும் பரவும் அதீத கட்டண விதிப்பு என்ற மாயையை உடைத்து, உண்மையை வெளிச்சமிட்டு மக்களிடம் காட்ட வேண்டியதை சரிவர செய்யாத தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கை கட்டாயம் கண்டிக்கலாம்.





பப் சமூகத்தின் மையப்புள்ளி

சமூகத்தில் பரவலாக உள்ள உணவு வகைகளை தவிர்த்து விட்டு அது சார்ந்த சூழலை சந்திக்க வேண்டும் என்பது முழுவதுமாக ஜனநாயகத்திற்கு எதிரானது. விருப்பம் இல்லாவிட்டால் அவற்றை பயன்படுத்தாமல் இருந்துவிட வேண்டிதானே ! குடியா மூழ்கி போய்விடும். பீஃப் இல்லாத உணவுத்திருவிழாவை போன்றதொரு சுயவிருப்ப நிலை தான் மது இல்லாத பப். இந்த குறும் சுயவிருப்ப நிலைகள் பொது சமூகத்தில் நிகழ்ந்த/நிகழும்/நிகழப்போகும் வெறுப்பு நிலைகளின் நிழல்கள் தான். 


மது இல்லாததொரு பப் என்பது எங்களின் விருப்பம்னுலாம் சொல்ல முடியாது. பப்ங்குறது குடிக்கவும் , அரட்டை அடிக்கவும் உருவானது தான்.


அப்படி உங்க விருப்பமா அது இருந்தா அதை ஏன் பொது சமூக கட்டமைப்பில் உள்ள ஒரு இடத்துக்குள்ள கொண்டு வரனும் ? பப் என்பது சமூகத்தின் மையப்புள்ளி. பொதுவாக மேலை நாட்டு கலாச்சாரம் தான் என்றாலும், அது சமூக கட்டமைப்பில் இருக்கும் இடம் ரொம்ப Sensitiveவானது. அங்க தப்பு நடக்கலனு சொல்ல வரல, எங்கதான் தப்பு நடக்கலனு தான் கேட்குறன் ? தப்பு நடந்தா சட்டப்படி தண்டிச்சு விட வேண்டி தான் அதுல எந்த மாற்று கருத்தும் இல்ல.


19ம் நூற்றாண்டுல உலக நாடுகள்ல பரவலாக இருந்த ஒரு பொழுதுபோக்கும் இடம் தான் பப். வாரஇறுதி நாட்களில் பொதுவான ஓர் இடத்தில் மக்கள் கூடி தங்களின் ஓய்வு நேரத்தை செலவிட்டனர். இதை கிட்டத்தட்ட (Common Home)  சத்திரம்னு சொல்லிக்கிட்டாங்க. யார் வேண்டுமானலும் வரலாம், போகலாம், மது அருந்தலாம், கூடி பேசலாம், அரட்டை அடிக்கலாம் . இதுதான் பின்னால பப்'ங்குற (Public home - Pub) கலாச்சாரமா உருவெடுக்க காரணமா இருந்தது. முதல்ல செல்வ வளமிக்கோர் வந்து ஓய்வு நேரங்களை கழிக்கும் பொழுதுபோக்கு கட்டடங்களாக இருந்த பப்கள், தொழில்துறை வளர்ச்சிக்கு பின்னர், கிராமங்களில் இருந்து பிழைப்புக்காக நகரங்களை நோக்கி நகர்ந்தவர்கள் கூடி பேசவும், பொழுதை கழிக்கவும் வாரமொருமுறை சந்திக்குற டீ கடை Spotஅ மாறுனுச்சு(மது தான் பிரதானம், மது மட்டும் தான் பிரதானம்). பொது சமூக கட்டமைப்பில் இயங்குற நிகழ்வோ, தொழிலோ அது சார்ந்த தொழில்முறை வளர்ச்சியை அடையுறப்போ, அது அடுத்த கட்டத்தையும், புதுமையையும் நோக்கி நகரும். நகர்ந்து தான் ஆகனும். அப்படி தான் பப் அதோட புதுமைகளையும் புதுவித கலாச்சாரத்தையும் நோக்கி நகர்ந்தது. மது குடிப்பதற்கும் Meet பண்ணி Fun பண்ட்றதுக்கு மட்டுமே உருவான பப்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் பிம்பத்தை கலை,அழகு சார்ந்த பொழுதுபோக்குகள் , அரசியல், தொழில்முனைவு ஆலோசனை கூடங்களாகவும், பல்வேறு தரப்பட்ட மக்கள் சந்திச்சு அவர்களோட எண்ணங்களை பிரதிபலிக்கவும் அப்படி பிரதிபலிக்கப்பட்டவையை ஏற்கவும், அப்படி இல்லை என மறுதலிக்கப்பட்டு உதறி தள்ளவும் 
இருந்த பொது சமூகத்திற்கான களமாகவும் மாறின பப்கள். கிராமங்கள்ல கூடுற தின்னை, வேப்பமர நிழல், டீ கடை படித்துறை , பம்படி, கோயில் குட்டிச்சுவரு மாதிரி நகரங்களில் உள்ள தியேட்டர், Mall, பார்க், சந்தை,இங்கயும் டீ கடை பிரதானம், கண்காட்சிகள் போன்றதொரு இடம் தான் பப்'பும்..., 


பப்களை, நாம் தியேட்டருக்கு போய் படம் பாக்குற மாதிரியான இடமாக வச்சிருக்கு ஒரு கூட்டம். நான் வாரத்துக்கு 2 படத்துக்கு போவன், நீங்க 7 படத்துக்கு கூட போகலாம் அது உங்க விருப்பம் , வசதி சார்ந்தது. அதுபோல தான் இப்போ பப்'பும். சமூக நீரோட்டத்தில் வளர்ந்து வரும் நவீன கலாச்சாரங்களை புறந்தள்ளுவதும் , அவற்றை குறுகிய வட்டத்திற்குள் அடைப்பதென்பதும் நாகரீக,சமூக வளர்ச்சிக்கான ஓர் SpeedBreaker தான். 


வடை தின்னா கொலஸ்ட்ரால் குறைய மாட்டுது, அதுனால வடை இல்லாத டீ கடைக்கு வண்டிய உட்றானு சொல்ட்றதும், அதுக்கு கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குற குரூப்பு ஆமாப்பா சொல்ட்றதும் நடக்கத்தான் செய்யும். ஏன் அந்த டீ கடையோட வருமானம் கூட நல்லா இருக்கலாம். ஆனா ஒண்ணு புரிஞ்சுக்கனும் டீ கடைகள், வெறும் கடை மட்டும் இல்லங்க. அது பொதுச்சமூகம் சந்திக்குற ஒரு களம். அந்தக்களம் தான் மனுசங்களை பொதுசமூகத்திற்கு ஏற்ற மாதிரியான, எல்லா உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க கூடியதாகவும், Atleast புரிஞ்சிக்குற மனநிலைக்கும் தயார்படுத்தி வந்திருக்கு.

வடை இல்லாத டீ கடை குறுகிய வட்டம்ங்க, அங்க வர கொஞ்ச பேரால புதியதொரு தொழில்முனைவுக்கான வளர்ச்சி இருக்கலாம், சமூக வளர்ச்சிக்கு வித்திடாது. எல்லாம் இப்படி யோசிச்சா தொழில் பண்ட்றாய்ங்க இப்ப மட்டும் தூக்கினு வந்துட்டனு கேட்கலாம், என்ன பண்ட்றது இப்படி விளக்குற அளவுக்கு எனக்கு இப்போதான அறிவு வந்திருக்கு. வேணும்னா முட்டைய சைவத்துல சேர்த்த மாதிரி பப்'புக்கு பதில் டூப்'னு வச்சுக்கோங்க. அந்தப் பேர் ஒரு கட்டமைப்பை வச்சிருக்கு. அதை உடைச்சிட கூடாது அவ்ளோதான். 


(பி.கு : ஆங் அப்பறம் இன்னொன்னு மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு)


Sunday, August 7, 2022

மழைநீர் வீணாக கடலில் கலப்பதென்பது வெறும் விதண்டாவாதம்.

மழைநீர் வீணாக கடலில் கலந்தது என்ற சொற்றொடரே அபத்தமானது.

2017ம் ஆண்டிற்கான உலகவங்கி அறிக்கையின் படி இந்தியாவில் 1083 செ.மீ மழையும், உலகம் முழுவதும் 20824.7 செ.மீ மழையும் பதிவானது.

 
ஆண்டுதோறும் பொழியும் சராசரி மழைப்பொழிவில் குறைந்தபட்சம் 14% முதல் அதிகபட்சம் 27% வரையிலான அளவிற்கு மட்டுமே மழை நீர் அணைகள், ஏரிகள், ஆறுகள்,  குளங்கள் மூலமாக சேகரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் குறைந்தபட்ச தகுதி நிலையினை கொண்ட அடையாளம் காணப்பட்டுள்ள 57,985 அணைகள் , 11 கோடியே 70 லட்சம் ஏரிகள் , 30 கோடியே 40 லட்சம் குளங்கள் , ஆயிரம் மைல் தூரங்களை தாண்டி பாயும் 76 நதிகள் மற்றும் அது தவிர்த்த ஏனைய கிளை நதிகள் உள்ளிட்டவை தான் இந்த அதிகபட்ச அளவான 27% வரையிலான நீரை சேமிக்கப் பயன்படுகின்றன. இது தவிர மீதமனைத்தும் கடலில் தான் கலக்கின்றன. மங்காத வளங்களை தன்னிடம் கொண்டிருக்கும் கடலின் மூலமே ! மழைநீர் கடலில் கலத்தலில் தான் அடங்கியுள்ளது. அவ்வாறிருக்கும் வளத்தின் மூலத்தினை எப்படி வீணாக கலக்கிறது என்று கூற முடியும்.  மழைபொழிவின் மொத்த அளவில் மிக சொற்ப அளவிலான நீர் மட்டுமே பல்வேறு நிலைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது. மீதமனைத்தும் சிலரின் கூற்றுப்படி வீணாக கடலில் கலக்கிறது. சிலர் சொல்வது போல் கற்பனைக்காக ஒரு சில அணைகளை கட்டுவதாகவே வைத்துக்கொள்வோம் , அப்போதும் கடலில் கலக்கும் மழைநீரின் அளவை 1 சதவீதம் அளவிற்கு கூட உங்களால் குறைத்து விட முடியாது என்பதே நிதர்சனம். இயற்கை அதன் சங்கிலித்தொடரை எங்கேயும் மாற்றிக்கொள்ளவில்லை. உயிரினங்களின், குறிப்பாக மனிதர்களின் அதீத தேவைகளுக்காக அந்த சங்கிலிதொடர் பல்வேறு செயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியில் தன்னை சற்று வளைத்தும் , நெழித்தும் தான் செல்கிறது. வேறு வழியில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எப்படி நியாயப்படுத்தினாலும், நாகரீக வளர்ச்சியடைந்த மனிதர்கள் இயற்கையின் சங்கிலித்தொடரில் தங்களை மிக வன்மையாக இடைச் சொருகிக்கொள்கிறார்கள். 


கடலில் மழைநீர் கலக்கவில்லை எனில் அதன் இயற்கையான சங்கிலித்தொடர் முற்றிலும் அறுபடும். அதிகபட்ச வளங்களை கொண்டுள்ள கடலில் வேதி மாற்றங்கள் நிகழும்.  கடல் மேற்பரப்பின் வெப்பநிலை பாதிப்பால் காலநிலை மாற்றங்கள் ஏற்படும். சிலரின் கூற்றான வீணாகும் மழைநீர் அதன்பின் மண் வந்து சேராத நிலைக்கும் வாய்ப்புண்டு.  இது புவியின் கழுத்தை இறுக நெரித்துக்கொண்டு மூச்சு விட சொல்வதற்கு சமமானது.


 அணைகள் கட்டுவதற்கான குறைந்தபட்ச புவி அமைப்பை/சூழலை பெற்றிராத தமிழ்நாடு போன்ற மா'நிலங்களில், மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது என எவர் கூறினாலும் அது அபத்தம், அதில் நிதர்சனம் இல்லை, வெறும் விதண்டாவாதம் தான்.  காமராஜர் இல்லை , கரிகால சோழனே வந்தாலும் இதான் எதார்த்தம்...

Tuesday, August 2, 2022

5ஜி ஆபத்பாந்தவனாக இருந்திருக்கும் !


2007ல் நடந்த 2ஜி அலைகற்றை ஏலத்தில் இந்திய ஒன்றியத்தில் மொத்தமுள்ள 22 தொலைத்தொடர்பு மண்டலங்களில் 18 மண்டலங்களுக்கு மட்டும் ஏலம் விடப்பட்டது. 4 மண்டலங்களில் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. 22 மண்டலங்களிலும் சேர்த்து ஏலத்தொகையாக எதிர்பார்த்தது 40 ஆயிரம் கோடி ரூபாய். ஆனா‌ல் 18 மண்டலங்களில் தனியார் நிறுவனங்கள் எடுத்த ஏலத்தொகை மதிப்பு 9407 கோடி ரூபாய் தான். அரசு எதிர்பார்க்கப்பட்ட தொகையை ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 30593 கோடி ரூபாய் குறைவான ஏலத்தொகையே கிடைத்தது.. அதற்கான காரணங்களும் பல இருந்தன. ஆனால் தலைமை தணிக்கைத்துறை எதிர்பார்க்கப்பட்ட தொகையையும் சேர்த்து அரசுக்கு உத்தேச வருமான இழப்பாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என அறிக்கை கொடுத்திருந்தது. அதனால் நடந்த வழக்கும் அதன் விவரங்களும் நாடறிந்தது. 


இதேபோன்று 3ஜி அலைகற்றையிலும் எதிர்பார்க்கப்பட்ட ஏலத்தொகையாக 35 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் ஏலம் போன தொகை 67 ஆயிரத்து 719 கோடியாகும்.

4ஜி ஏலத்தில் அரசு தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட தொகயானது 40ஆயிரம் கோடி ரூபாய் . ஆனால் ஏலம் போன தொகை 77 ஆயிரத்து 814 கோடி ரூபாய்.

தற்போது நடைபெற்ற 5ஜி அலைகற்றை ஏலத்தில் அரசு எதிர்பார்த்த உத்தேச தொகை 4.3 லட்சம் கோடிகள். ஆனால் ஏலம் எடுக்கப்பட்ட தொகை 1லட்சத்து 50ஆயிரத்து 173 கோடி ரூபாய் மட்டுமே. எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட 2லட்சத்து 79 ஆயிரத்து 827 கோடி ரூபாய் குறைவு. 

2ஜி அலைக்கற்றை ஏலத்தின் போது எதிர்பார்க்கப்பட்ட ஏலத்தொகையில் 30 ஆயிரத்து 593 கோடி ரூபாய் குறைவாக ஏலம் போனதற்கு , அதைவிட கிட்டதட்ட 4 மடங்கு அதிகமாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பீட்டு கணக்கை அந்த காலகட்டத்திலேயே சமர்பித்த தலைமை தணிக்கை துறை, 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 4 மடங்கு வருவாய் இழப்பீடு என இந்தியாவே கேட்டிடாத ஒரு தொகையை கணக்காக தற்போது சமர்பித்தால் என்னவாகும் ? என்பதை யோசித்தாலே தலை சுற்றுகிறது !!

2ஜி ஏலத்தின் போது எதிர்பார்க்கப்பட்ட தொகை அந்த காலகட்டத்தில் மிக அதிகமானது. ஆனால் பெருந்தொகை எதிர்பார்க்கப்பட்டதன் காரணம், அப்போது தனியார் நிறுவனங்களின் போட்டிகள் மற்றும் தொலைத்தொடர்பு துறையின் அதீத வளர்ச்சி. அதன்பிறகான 3ஜி மற்றும் 4ஜி அலைகற்றையிலும் இந்த நிலை தொடரத்தான் செய்தது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதால் அதைப்பற்றி பெரிதாய் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் 3ஜி மற்றும் 4ஜி க்கு எதிர்பார்க்கப்பட்ட தொகையே மிக மிக குறைவானது. குறைவான எதிர்பார்ப்பு தொகையை கூறி அதிகமான ஏலத்தொகையை பெற்றதால் அதுகுறித்தான சர்ச்சைகளுக்கும் , விமர்சனங்களுக்கும் வாய்ப்பில்லாமல் போனது. 2ஜி முதல் 5ஜி வரையிலான தொலைத்தொடர்பு வளர்ச்சி இந்தியாவில் உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு அபரிவிதமானது. ஜியோவின் வருகைக்கு பின் தொலைத்தொடர்பில் போட்டிகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். ஆனால் போட்டிக்கான சூழலும், களமும் மிக அதிகமாகவே இருக்கிறது. அதனை அரசு பயன்படுத்தி கொள்ளாததே தற்போது தொலைத்தொடர்பு துறை மூலமாக பெரும் பொருளாதார வருவாய் இழப்பின் காரணம். 

இத்தனை தனியார் நிறுவனங்களின் ஏல பங்களிப்பில் பெற்ற குறும் ஏலத்தொகைக்கு பதிலாக, BSNLக்கு 1 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு புத்துயிர் அளிக்கும் திட்டத்தின் மூலம் 5ஜி அலைகற்றை ஏலத்தை முழுமையாக BSNLயிடம் கொடுத்திருக்கலாம். அப்படி கொடுத்திருக்கும் பட்சத்தில் தற்போதைய 5ஜி ஏலத்தொகையை விட 13 ஆயிரத்து 287 கோடி ரூபாய் அதிகமாக பெற்றிருக்கலாம். மேலும் BSNLஐ வளர்ச்சி பாதைக்கும், தொலைத்தொடர்பு சேவைகளை மக்களுக்கு ஜியோவை விட மிக குறைந்த விலையிலும் வழங்கியிருக்கலாம். மேலும் BSNL இவ்வளவு பெரிய தொகையுடன் போட்டியிட்டிருந்தால் ஏலத்தில் பங்கெடுக்கும் நிறுவனங்கள் இன்னும் அதிக தொகைக்கு ஏலம் கேட்டிருப்பார்கள். அதன்காரணமாக ஏலத்தொகை எதிர்பார்க்கப்பட்டதை விட பலமடங்கு அதிகமாக உயர்ந்திருக்கும். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அரசுக்கு ஆபத்பாந்தவானாக 5ஜி இருந்திருக்கும் ....

Saturday, July 30, 2022

செஸ் ஒலிம்பியாட் 2022


ஒவ்வொரு சர்வதேச போட்டிகளை நடத்தும் நாடுகள் அந்த வருடம் மற்றும் அதன்பிறகான ஒன்றிரண்டு வருடங்களில் அந்நிய நேரடி முதலீடுகளை சற்று அதிகமாகவே ஈர்த்துள்ளது. அந்நிய முதலீட்டு வளர்ச்சிக்கான முழுமையான காரணங்களாக இவற்றை கருத முடியாது என்றாலும் முதலீடுகளை ஈர்ப்பதில் இவை முக்கிய பங்கு வகித்துள்ளதையும் மறுக்க முடியாது. சாதாரணமாக அந்நிய முதலீடுகளை கணக்கிடுவதில் இருந்து அந்நாடுகள், இவ்வகையான சர்வதேச போட்டிகள் முடிந்த பிறகு அந்நிய முதலீடுகளை சற்று அதிகமாகவே ஈர்த்துள்ளது. இதற்காக, இதற்குமுன் நடந்த ஒலிம்பிக் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்த ஒரு சில நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை, உலக வங்கியின் FDI Reportன் படி ஒப்பீட்டளவில் பார்த்தால் இது புரியவரும். அதன் பிறகான வீழ்ச்சிகளையும் பல நாடுகள் சந்தித்துள்ளன. ஆனால் அதற்கு உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாகவும் இருந்துள்ளது. தற்போது சென்னையில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அந்நிய முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்திய ஒன்றிய அளவிலும் ஈர்ப்பதற்கான அதிக காரணிகளை கொண்டுள்ளது. அந்நிய முதலீடுகளை இந்தியாவுடன் சமவிகித அளவில் ஈர்த்து வரும் நாடுகளை விட ஒரு புள்ளி அளவிற்காவது அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் நிச்சயம் முன்னேறும். அதற்கு செஸ் ஒலிம்பியாட் தவிர்க்க முடியாத காரணமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சுற்றுலாத்துறையில் இதுவரை இருந்து வந்த நிலையை விட சற்று அதிகமான பொருளாதார வளர்ச்சியையும் , வேலைவாய்ப்பையும் உண்டாக்கவிருக்கிறது தமிழ்நாடு சுற்றுலாத்துறை. கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னும் - 2021 பிற்பகுதிக்கு பின்னரும் வெளிநாட்டினரின் வருகையை மையமாக வைத்து சுற்றுலாத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், அளிப்பதிலும் உலகளவில் இந்தியா 2வது இடத்திலும் , மாநிலங்கள் அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஒலிம்பியாட்டுக்கு பின்னான ஒட்டுமொத்த இந்திய சுற்றுலாத்துறை சார்ந்த தரவரிசையிலும், பொருளாதாரத்திலும் நிகழும் மாற்றங்களுக்கும் , வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் முக்கிய காரணமாக இருப்பார்கள்.

வளர்க !!

Tuesday, July 26, 2022

தற்கொலைகள் கொலைகளே

எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் 2k கிட்ஸ் என தொடர்ச்சியாக மீம் மற்றும் பதிவுகளை காண நேர்ந்தது.

NCRB அறிக்கையின் படி தமிழ்நாட்டில் 1991-2000 வரை சராசரியாக ஆண்டிற்கு 9,540 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள்.(உயிரிழப்புகளும் அடங்கும்). இது மொத்த இந்திய ஒன்றியத்தில் 10.11 சதவீதம்.

2001- 2010 வரை சராசரியாக ஆண்டிற்கு 13,084 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள். இது மொத்த இந்திய ஒன்றியத்தில் 10.96 சதவீதம்.

2011- 2020 வரை சராசரியாக ஆண்டிற்கு 15,503 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள். இது மொத்த இந்திய ஒன்றியத்தில் 11.43 சதவீதம்.

இந்த தற்கொலை விகிதங்களை பார்த்தால் அப்போதிருந்து இப்போது வரை எண்ணிக்கை அளவில் ஆண்டுதோறும் உயர்வு இருந்து கொண்டே தான் உள்ளது. கடந்து 30 வருடங்களை ஒப்பிடும் போது கடந்த 10 வருடங்களில் அதிகரிக்கும் எண்ணிக்கை அளவில் விகிதம் குறைந்து தான் உள்ளது.

2k கிட்ஸ் முடி வெட்ட சொன்னால், யூனிபார்ம் போட சொன்னால் , சாப்பிட சொன்னால், பள்ளி கல்லூரிக்கு சீக்கிரம் வர சொன்னால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என 80s ம்/ 90s ம் இஷ்டத்துக்கு பேசி நகைப்பது வேடிக்கையாக உள்ளது. வீட்ல உன்னை குப்பை தொட்டில இருந்து எடுத்து வந்தோம்னு கதை விட்டதுக்குலாம் பூச்சி மருந்த தண்ணீல கலந்து குடிச்சவனுங்க தான நாமலாம். உங்களுக்கு அப்போ மிகப்பெரிய பிரச்னையா காதல் தோல்வியா இருந்ததுனா ! இப்போ உள்ளவங்களுக்கு அது வேற ஒண்ணா மாறியிருக்கு அவ்ளோதான்.

கல்வி சூழலால் ஏற்பட்ட தற்கொலை முயற்சிகளின் விகிதம் கூட 1990-2010 ஐ விட 2010-2020ல் அதிகமாக உள்ளது. அப்போ நீங்க வாழ்க்கையா நினைச்சு உசுர விட துணிஞ்சது வேற ஒண்ணு . அவன் இப்போ வாழ்கையா நினைக்குறதுல வேற ஒண்ணுக்கு முக்கியத்துவத்தை கொடுக்குறான். அதுக்காக தற்கொலை தான் வழினு சொல்லல. அவன் எதுக்காக சாகுற அளவுக்கு போறன்ங்குற உளவியல் காரணம் ரொம்ப முக்கியம். அப்போதான் சரி செய்ய முடியும். இளமை பருவத்துல உள்ள மனச்சிக்கல்களை சரிசெய்ய அரசுடன் இணைந்து நாமும் முயற்சிக்க வேண்டிய தருணங்கள் தான் இப்படிப்பட்ட தற்கொலைகள் நடக்குற சூழல்கள் எல்லாம் . அதைவிட்டு எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்யுறாய்ங்கனு நக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கு.? அவனு/ளுக்கு முன்னே நீங்க காரணமா சொன்ன எல்லாத்தையும் கடந்து வரது எளிதா இருக்கு. ஆனா இதலாம் ஒரு பிரச்னையானு நீங்க இப்போ நினைக்கிற ஒண்ணு அவனை/ளை மோசமா பாதிக்குது. அப்போ அதோட தீவிரத்தை குறைக்கவும் , அறியாமையை தெளிவுப்படுத்தவும் வேண்டிய கடமை நமக்கும் இருக்கு தானே. அட அதுக்கூட வேணாம், அப்படி செய்ய முடியலனாலும் அதை ரொம்ப சாதாரணமா பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை தான். இப்போ மயிறு வெட்றதுலாம் பிரச்னையான தூக்கினு சுத்துற. மயிறு வெட்றதுல பிரச்னை இருக்குனு அவன்/ள் சொன்னா அதை சரிசெய்யனும், அதுதான் ஒரு அறிவு முதிர்ச்சியடைந்த சமூகம் செய்ய வேண்டியது. அதைவிட்டுட்டு தற்கொலை செஞ்சிட்டு அங்க ஒருத்தி செத்து கிடக்குறப்போ இவனுங்களுக்கு அப்படி என்ன மீம போட்டு நொட்டுறதுல இருக்குனு புரியல. அதோட அவனுங்க எட்டிகூட பாக்காத இந்த fbல போட்டு புரண்டுட்டு இருக்கானுங்க. யாருக்கு என்னத்தடா சொல்ல வறீங்க. இதுல கொடுமை என்னனா , பொறுப்புமிக்க நபர்கள் பலரும் கூட அதை செய்றது தான். அதீத வருத்தமாவும் இருக்கு.

முதல்ல 11 கழுதை வயசான நீங்க வளருங்கடா அப்பறம் வந்து அவனுங்கள வளரச் சொல்லலாம்.. 

என்னை பொறுத்தவரை தற்கொலைனு ஒண்ணு கிடையாது. அதுலாம் கொலை தான். அதுக்கு காரணத்தை கண்டுபிடிச்சு தண்டிக்க வேண்டியதும், சரிசெய்ய வேண்டியதும் இந்த ஒட்டுமொத்த சமூகத்தோட பெருங் கடமை தான். 
கொலை குற்றவுணர்ச்சிகளுக்கு எங்களை ஆளாக்கிடாதீங்க புள்ளைங்கள. எந்த பிரச்னைனாலும் சரி பண்ணிக்கலாம். உசுரை மாச்சிக்குறதுலாம் தீர்வு இல்ல.

Friday, July 1, 2022

தரவரிசையால் தடைபடாத வளர்ச்சி

(BRAP)மாநில வணிக சீர்திருத்தங்கள் செயல் திட்டத்தை, 301 சீர்திருத்தங்களுடன் கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் (EODB) எளிதாக தொழில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசுகள் உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இது உதவியது. மேலும் இனி வரும் காலங்களில் இதன் தரவரிசை நிலைகள் 2020 செப்டம்பர் முதல் புதிய திருத்தங்களுடன் 15 பிரிவுகளில் 301 காரணிகளின் செயல்பாடுகளை கொண்டு அளவிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் BRAP உறுப்பினர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கருத்துகள் அடிப்படையிலும் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பட்டியலானது 2020ம் ஆண்டிற்கானது. மேலும் இதில் 9 பிரிவுகளில் உள்ள 72 சீர்திருத்தங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.   இதில் 97.89% பெற்று ஆந்திரா முதல் இடத்திலும் , 97.77% பெற்று குஜராத் இரண்டாவது இடத்திலும் , 96.97% பெற்று தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும்  உள்ளது. 

 2021 மற்றும் 2022ம் ஆண்டிற்கான EODBல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இன்னும் பன்மடங்கு முன்னேறி செல்லலாம், அதே சமயம் அடுத்த வருட BRAP தரவரிசையில் அவை அதல பாதாளத்திற்கும் கூட செல்லலாம். காரணம் திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட  சட்டங்களை தமிழ்நாடு, கேரளா , மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் பின்பற்றாது என ஏற்கனவே தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்தாண்டு BRAPல் இவை உட்பட 15 பிரிவுகளில் உள்ள 301 சீர்திருத்தங்களையும் கருத்தில் கொண்டே தரவரிசை வெளியிடப்படும் போது, அவற்றில் பல்வேறானவற்றை தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களால் நடைமுறைப்படுத்த/ ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள நிலையில், இவைகள் BRAPல் அடிப்படை தகுதி நிலைகளாக தொடர உள்ளன.  எனவே அடிப்படை தகுதி நிலைகளை சரிவர பின்பற்ற இயலாத காரணத்தால் தரவரிசையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இன்னும் பின்னோக்கி செல்லலாம். ஆனால் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை அதி கவனம் செலுத்தி ஊக்குவிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் வளர்ச்சியை இந்த தரவரிசை தடுத்துவிடாது.